Mi-Voice MIC News

சுங்கை சிப்புட் மக்கள் பசியால் வாடிவிடக்கூடாது என்பதற்காக பரிவு உணவு உதவித் திட்டம் இன்று தொடங்கியது! – தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் முன்னேடுப்பு

“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய பாரதியாரின் பாடலுக்கு ஏற்ப சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி மக்களின் பசியை போக்க ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் பரிவு உணவு உதவித் திட்டம் ஒன்றை முன்னேடுத்துள்ளார்.

கோவிட் 19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட சுங்கை சிப்புட் மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பரிவு உணவு உதவித் திட்டம் மலேசிய இந்திய இளைஞர் மேம்பாட்டு அறவாரியத்தின் ஏற்பாட்டில் சுங்கை சிப்புட் ம.இ.கா ஆதரவில் இன்று ஜூ்லை 22ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக இன்று 600 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கோவிட் 19 பெருந்தொற்று மலேசிய மக்களின் வாழ்வாதாரத்தையும் புரட்டிப் போட்டு விட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் நாடு தழுவிய நிலையில் மாநிலம்,தொகுதி மற்றும் கிளை அளவில் ம.இ.காவினர் பலரும் உணவு வழங்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் சுங்கை சிப்புட் தொகுதி மக்களின் பசியை போக்கும் நோக்கத்தில் மலேசிய இந்திய இளைஞர் மேம்பாட்டு அறவாரியம் ஏற்பாட்டில் ம.இ.கா ஆதரவில் தினமும் 600 பேருக்கு உணவு வழங்கும் முன்னேடுக்கப்பட்டுள்ளது. இந்த பரிவு உதவித் திட்டம் இன்று ஜூலை 22ஆம் நாள் தொடங்கி தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இந்த பரிவு உணவு பெறுபவர்களின் எண்ணிக்கை எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிட் 19 காலகட்டத்தில் மக்கள் உணவுக்காக வாடக்கூடாது என்பதற்காக ஏழை எளியவர்களுக்கு உணவுகள் தொடர்ந்து வழங்கப்படும். இந்த பரிவு உணவு உதவித் திட்டம் மதிய உணவாகவும் இரவு உணவாகவும் ம.இ.கா தொகுதி தலைவர்கள், சமூகநல இயக்கங்கள், அலுவலகப் பணியாளர்கள் மூலமாக சுங்கை சிப்புட் மக்களுக்கு வழங்கப்படும். இந்த உணவு தரமான முறையில் மக்களுக்கு வழங்கப்படவிருக்கின்றன.

கடந்தாண்டு முதல் முறையாக கொண்டு வரப்பட்ட முழு ஊரடங்கு காலகட்டத்தில் தொடர்ச்சியாக 2 மாதங்களுக்கு தினமும் உணவு வழங்கப்பட்டன. அதுபோலவே தற்போது இந்த உணவு வழங்கும் திட்டம் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அவர்களின் பெருமுயற்சியில் மக்களின் தற்போதைய தேவையறிந்து முன்னேடுக்கப்பட்டுள்ளது. இந்த உணவு பொட்டலங்கள் தேவைப்படும் மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.anegun.com/?p=48743