Mi-Voice MIC News

Happy Wesak Day

Wishing everyone a peaceful and enlightened Wesak Day. May we all find the path to inner peace and compassion.

எக்காலத்திற்கும் பொருந்தும் தத்துவங்களை சொன்ன
‘கௌதம புத்தர்’  எல்லோராலும் போற்றப்படும் சித்தார்த்தர்
விசாக தின  வாழ்த்து

கோலாலம்பூர், மே 21-
எக்காலத்திற்கும் பொருந்தும் தத்துவங்களை சொன்ன
‘கௌதம புத்தர்’  எல்லோராலும் போற்றப்படும் சித்தார்த்தர் என்று ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் நமது
விசாக தின  வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் விசாக தினம் பௌத்தர்களுக்கு மிக முக்கியமான புனித நாளாகும். மே மாத பௌர்ணமி நாளன்று பெளத்தர்களால் கொண்டாடப்படும் விசாக தினத்தை முன்னிட்டு புத்தமதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

கௌதம புத்தர்’ என்று எல்லோராலும் போற்றப்படும் சித்தார்த்தர், ஒரு இந்திய மதகுரு மட்டுமன்றி, உலக மதங்களுள் மிகவும் பிரசித்திப் பெற்ற புத்த மதத்தைத் தோற்றுவித்தவரும் ஆவார். எக்காலத்திற்கும் பொருந்தும் ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’, ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’, ‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்’ போன்ற எண்வகை வழிகளையும் போதித்த புத்தர், இந்த உலகில் தோன்றிய மகா ஞானிகளில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர்.

மன அழுத்தங்கள் அதிகரித்து வரும் இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், புத்தரின் வாழ்க்கையும் போதனைகளும் ஒரு சிறந்த மருந்தாக அமையும். புத்தரின் போதனைகளனைத்தும் மனிதர்களைத் துன்பத்திலிருந்து விடுவிக்கும் வித்தையைக் கொண்டவை என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.

விவேகம் மற்றும் அறிவின் மறுவடிவமாகவே கருதப்பட்டவர் புத்தர். ஆக இன்று கொண்டாடப்படும் விசாக தினம், புத்தரின் பிறப்பு, ஞானம் பெற்றது, இலட்சிய உயர்நிலை ஆகியவற்றைக் குறிக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களும், மகான்களின் வாழ்க்கைப் போதனைகளும் மனிதவாழ்வில் முக்கிய அங்கமாக அமைகின்றன. அவர்கள் கடந்து வந்த பாதையை நாம் கருத்தில் கொண்டு நமது இன்றைய வாழ்க்கையை செழுமையாக அமைத்துக் கொள்ள வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் புத்த மதத்தை பின்பற்றுகிறவர்கள்  அனைவருக்கும  தமது விசாக தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.